வனப் பகுதிகளையொட்டிய விளைநிலங்களில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பது தொடர்கின்றன. கோவை மாவட்டம் மத்திப்பாளையம் கிராமத்தில் இன்று வயல் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறைஅதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது, இன்று நேற்று நடக்கும் சம்பவங்கள் இல்லை. இதுதொடர்பாக தவறு செய்தோர் மீது கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை தேவை என்பதே வன விலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,113 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கின்றன. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன?
விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம்.
இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.
கடுமையான தண்டனை அளிக்க நடவடிக்கை தேவை
இதுகுறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த காட்டுயிர் செயற்பாட்டாளர் கே.மோகன் ராஜ் கூறியது "விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும். யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன" என்கிறார் அவர்.