சிறப்புக் களம்

சென்னை: போக்குவரத்தை சீர்ப்படுத்தியவாறே இலவச முகக்கவசம் வழங்கும் டிராபிக் ஆய்வாளர்

Veeramani

சென்னை வடக்கு கடற்கரை காவல் பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தி கொண்டே பொது மக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சென்னை வடக்கு கடற்கரை காவல் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஜெயச்சந்திரன், பொதுவாக ஜெயசந்திரனை பிராட்வே பகுதியில் உள்ள முத்துசாமி பாலம், ரிசர்வ் வங்கி சுரங்க பாதை, உயர்நீதி மன்றம், பூக்கடை சிக்னல் ஆகிய பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்வதை நாள் தோறும் பார்க்கலாம்.

ஆனால் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா தொற்றின் காரணமாக, வழிகாட்டு நெறிமுறைகளை மிகவும் தீவிரமாக கடைபிடிக்க அரசு சார்பில் வலியுறுத்த பட்டுள்ளது. எனவே அவர் தனது போக்குவரத்து காவல் பணியோடு சேர்த்து பிராட்வே பேருந்து நிலையத்தில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கி வருகிறார்.

53 வயதாகும் ஜெயசந்திரன் கடந்த வருடம் கொரோனா பரவலின் போதே முககவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார், இந்நிலையில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மீண்டும் தன்னுடைய சேவையை தொடர்வதாக தெரிவிக்கிறார்.

இது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயசந்திரனை தொடர்பு கொண்ட போது, கடந்த வருடம் ஊரடங்கின் போது, முக கவசத்தின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது, அப்போது எங்களுக்கு காவல்துறையில் வழங்கும் முககவசத்தை விலை கொடுத்து வாங்க முடியாத நடைமேடை வாசிகளுக்கு வழங்கினோம்.  இந்த வருடம் தற்போது மாஸ்க் அணிவதை அரசு கட்டாயமாக்கியதை கருத்தில் கொண்டு நாள்தோறும் 100 முககவசம் வழங்கி வருகிறேன்.

என்னோடு சேர்ந்து காவல்துறை நண்பர்களும் அவர்களால் வழங்க முடிந்த மாஸ்க்குகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதோடு பேருந்துகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் பொது மக்களிடம் விளக்கி வருகிறோம்.

அடுத்த வாரம் முதல் பேருந்துகளில் வரும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க உள்ளோம். நான் மட்டுமின்றி எனது காவல் நிலையத்தில் உள்ள காவலர்களும் நான் செய்வதை பார்த்து முககவசம் வழங்குவது, கொரோனா காலத்தில் போதுமக்களுக்கான உதவிகள் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

- ந.பால வெற்றிவேல்