சிறப்புக் களம்

நாகை: அனாதையாக இறந்த 2500 உடல்களை அடக்கம் செய்து திதி கொடுக்கும் சமூக சேவகர்.!

webteam

ஆதரவற்ற நிலையில் இறந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர். மஹாளய பட்ச அமாவாசையை முன்னிட்டு நாகையில் பித்ருகளுக்கு உறவாக நின்று ஆன்மா சாந்தி அடைய வேண்டி வங்க கடலில் தர்ப்பணம் செய்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவுலகில் பிறக்கும் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆதரவற்றவர்களாகி இறந்து போகும்போது அவர்களுக்கு உறவாக மாறி உறவுகள் நிறைவேற்ற வேண்டிய இறுதிச் சடங்கை தனிமனிதராக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருபவர் நாகையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திரன் (64). சாதி மதம் பாராமல் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துவங்கிய இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 2500 க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள், கட்டிய மனைவியே அருகில் வர அச்சப்பட்டு கொரோனா நோயால் இறந்தவர்கள் என பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மனிதர்களை மற்றவர்கள் நெருங்கி வரக்கூட அருவருக்கும் நிலையில், தனி ஆளாக சுமந்து பிணவறைக்கு எடுத்து சென்று பாதுகாத்து அனைவரும் சமம் என இந்து முறைப்படி அடக்கம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 25ஆம் தேதி மஹாளய அமாவாசை வருவதோடு அதற்கு முந்தைய 15 நாட்கள் மஹாளயபட்சம் என்பதால், தான் அடக்கம் செய்த 2500க்கும் மேற்பட்டோருக்கு உறவாக இருந்து ஒரே இடத்தில் திதி அளிக்க முடிவு செய்த ராஜேந்திரன், நாகை புதிய கடற்கரையில் இன்று ஐதீக முறைப்படி தமது குடும்பத்தினருடன் தர்ப்பணம் செய்து வங்க கடலில் திதி அளித்தார். மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்துவரும் சமூக ஆர்வலர் ராஜேந்திரனின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில் வியப்பை மட்டுமல்ல நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய சமூக ஆர்வலர் ராஜேந்திரன் பேசுகையில், அனாதை உடல்களை அடக்கம் செய்யும்போது எந்தவித சம்பிரதாயமும் இன்றி மண்ணில் புதைப்பது தன்னை வெகுவாக பாதித்ததாகவும் பூவுலகில் உயிரிழந்த மனிதர்களுக்கு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு மேலோங்கி வந்தது தான் இதற்கு காரணம் என்றார்.

மேலும் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் மஹாளய பட்ச நாட்களில் பூ உலகத்திற்கு வருவார்கள். ஆத்மாக்களுக்கு அவரது உறவினர்கள் திதி அளித்து ஆத்மாக்களை புண்ணியம் அடைய வைப்பார்கள். ஆதரவற்ற நிலையில் மறைந்த ஆத்மாக்களும் வந்து உறவுகள் இல்லாததால், அந்த ஆத்மாக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் என்பதால், ஆதரவற்ற ஆத்மாக்களுக்கும் நானே உறவு என்ற முறையில் நிழலாக நின்று 2500க்கும் மேற்பட்ட நபர்களின் புகைப்படங்களை வைத்து ஐதீக முறைப்படி தர்ப்பணம் அளித்துள்ளது தனக்கு மன நிறைவை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.