மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த மொட்டைமலை பகுதியைச் சேர்ந்த ஜெயமணி - டெய்சி ராணி தம்பதியின் இளைய மகன் விக்னேஷ். கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர் சில தினங்களாக புளுவேல் சேலஞ்ச் என்ற ஆபத்தான ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார். அந்த விளையாட்டால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட விக்னேஷ், விளையாட்டு படிநிலையின் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரவு நேரத்தில் யாருமற்ற இடத்தில் நின்று செல்பி எடுப்பது, புளுவேல் என்று உடலில் செதுக்கிக் கொள்வது, ரத்தத்தில் எழுதுவது, குடிப்பழக்கம் இல்லாத மாணவர் குடிப்பது என்று வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் விபரீதத்தை தாமதமாக உணர்ந்து பெற்றோரிடம் சென்று சொன்ன விக்னேஷ், அதன் பின்னர் சிலநாட்கள் விளையாடாமல் இருந்துள்ளார். ஆனால், மீண்டும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட விக்னேஷ், தனது நண்பர்களிடம் சவால் விட்டு கடைசி கட்டத்தை விளையாடியபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் 130 பேரை பலிகொண்டுள்ள இந்த ஆன்லைன் ஆபத்தின் கரங்கள் தமிழகத்தையும் எட்டிவிட்டதால் பெற்றோரிடையே அச்சம் பரவியுள்ளது. ஆன்லைனிலும், ஆண்ட்ராய்டு போன்களிலும் பலமணிநேரம் செலவிடும் பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவல்துறையினர்.
விக்னேஷின் மரணத்தை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் புளுவேல் சேலஞ்ச் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மாவட்ட எஸ்பி மணிவண்ணன். ஆயினும் ஆன்லைன் விளையாட்டுக்கு தங்கள் செல்லமகனை பறிகொடுத்துவிட்ட பெற்றோருக்கு அந்த உயிரை யாரும் திருப்பித்தரப்போவது இல்லை. இனிமேலும் ஒரு உயிரை ஆன்லைன் விளையாட்டுக்கு பலிகொடுத்துவிடக்கூடாது என்ற உத்வேகத்துடன் செயல்படவேண்டிய தருணமாக இந்த நாள் அமைந்துவிட்டது.
மதுரையில் ப்ளுவேல் கேம் விளையாடி உயிரிழந்த விக்னேஷின் தாய் மேலும் 75 பேர் இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறியதை அடுத்து விரிவான விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி முருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில், தீவிர குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவினர் இடம்பெற்றுள்ளனர். விக்னேஷின் உறவினர்கள், நண்பர்களை அழைத்து, அவர்கள் யாரேனும் ப்ளுவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் தீவிரமாக கண்காணித்து யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ஏதேனும் சந்தேகம் எழுந்தால், 77088 - 06111 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவலளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷின் செல்போனை கைப்பற்றி அதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விக்னேஷின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பிரேத பரிசோதனை முடிந்து விக்னேஷின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ப்ளுவேல் விளையாட்டால் உயிரிழந்த விக்னேஷின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படும் என திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூமிநாதன் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் விக்னேஷின் உடலில் ஓரிரு வெளிபுற காயங்கள் மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார். கல்லூரி மாணவர் விக்னேஷ் தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.