சிறப்புக் களம்

முண்டாசு கவி பாரதியின் பிறந்த தினம் இன்று

முண்டாசு கவி பாரதியின் பிறந்த தினம் இன்று

webteam

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 135ஆவது பிறந்தாள் இன்று. 

முறுக்கு மீசை. சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள். 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில்‌ பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பாரதியாரின் பன்முகங்கள் நீள்கின்றன. தனது கவிதைகளில் சமூக சீர்திருத்த கருத்துகளையும், தேச பக்தியையும் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்த பாரதியாரின் பணி விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானது. 

பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றளவும் கனவு நாயகனாகத் திகழ்கிறார் பாரதியார். தனது மாறுபட்ட சிந்தனைகளினால் மூட நம்பிக்கைகளையும், முரண்களை உடைத்து, பிற ஆளுமைகளில் இருந்து பாரதியார் சற்றே வேறுபடுகிறார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றும் தந்தை பெரியாருக்கு முன்பே முழங்கியவர் அவர். உச்சரிக்கும்போது உணர்ச்சி பொங்கச் செய்யும் மொழிநடை பாரதியின் கவிதைகளுக்கு மட்டுமே உரியது. 

நூற்றாண்டுக்கு முன் பாரதியார் எழுதிய கவிதைக‌ள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துபவையாகவே உள்ளன. சமூகத்தின் மீதான பற்றும், சக மனிதர்கள் மீதான அவரது அக்கறையும் பாரதியாரின் பாடல்களில் எதிரொலிப்பதை அறிய முடிகிறது. திரைப்படங்களிலும், சினிமா பாடல்களிலும் இன்று வரை பாரதியாரின் கவிதைகள் இடம்பெறுவது, அதன் தாக்கத்தையும், தேவையையும் உணர்த்துகிறது. இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது வாழ்நாளில் பாரதியார் ஆற்றிய தமிழ்ச்சேவை சொல்லிலடங்காது.தமிழுலகின் விலைமதிப்பில்லா பொக்கிஷமான பாரதியாரை போற்ற வேண்டியதே நமது கடமை.