சிறப்புக் களம்

சாட்டிங்கில் மோடியை வசைபாடிய விஜய் ரசிகர் கைது: கருத்து சுதந்திரத்திற்கு சவாலா?

webteam

பிரதமர் மோடி குறித்து பாஜக பொறுப்பாளருடன் சாட்டிங் செய்த 19 வயது பொறியியல் மாணவரும், விஜய் ரசிகருமான திருமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக 19 வயது இளைஞர் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விருதுநகர் எஸ்.பி. ராஜராஜன், “பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த எஸ்.திருமுருகன் என்ற 19 வயது பொறியியல் மாணவரை கைது செய்துள்ளோம். பாஜகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாரிமுத்துவுக்கும், திருமுருகனுக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட முறையிலான உரையாடலில் (சாட்டிங்) அம்மாணவர் பிரதமர் குறித்து மோசமாக பேசியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “திருமுருகனும், மாரிமுத்துவும் ஃபேஸ்புக் நண்பர்களாக உள்ளனர். விஜய் ரசிகரான திருமுருகனுக்கு, பாஜக பொறுப்பாளரான மாரிமுத்து, விஜய் மெர்சல் படத்தில் பேசிய வசனங்களை விமர்சிக்கும் வகையிலான மீம் செய்தியை ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து கோபமடைந்த மாணவர் திருமுருகன், பிரதமர் மோடியை ஆபாச வார்த்தைகளால், அவதூறாகப் பேசியுள்ளார். இந்த உரையாடலை ஃபோட்டோ எடுத்து, காவல்துறையில் ஒரு புகாராக மாரிமுத்து அளித்துள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்து மோசமாக பேசியதாக மாணவர் திருமுருகனே ஒப்புக்கொண்டார்” என்று எஸ்.பி.ராஜராஜன் கூறினார்.

மெர்சல் படத்தில் வரும் வசனங்கள் மோடி அரசின் திட்டங்களையும், கொள்கைகளை விமர்சிப்பதாக மிகப்பெரிய சர்ச்சை உருவானது. தமிழக பாஜக தலைவர்களும், இந்து அமைப்புகளும் நடிகர் விஜயையும், மெர்சல் படக்குழுவினரையும் கடுமையாக விமர்சித்தனர். எதிர்ப்புகளையும் மீறி மெர்சல் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனைகளைப் படைத்தது. ஒருவழியாக மெர்சல் பிரச்னை ஓய்ந்து, பருவமழையை எதிர்கொள்வது குறித்து மக்களின் கவனம் திசை திரும்பியுள்ள சூழலில் விஜய் ரசிகரும், 19 வயது பொறியியல் மாணவருமான திருமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் திருமுருகன் மீது சமூக வலைத்தளங்களில் அத்துமீறுபவர்களுக்கு எதிரான சட்டம் 67, 2000. பொது அமைதியை குலைப்பதற்கு எதிரான குற்றவியல் நடைமுறை சட்டம் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, மதுரை மேலூரில் உள்ள 18 முதல் 22 வயது கொண்டோருக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசும்போது, இந்த கைது நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், மோடி அரசால் இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற போக்கு அதிகரித்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பாஜகவின் மீதான விசுவாசத்தைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், இந்த மாநில அரசு மொத்தமாக மாநிலத்தின் உரிமையையும், சுயமரியாதையையும் அடகு வைத்துவிட்டது என்றும் இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்பதோடு, அதிமுகவுக்கும் கேடாகவே அமையும் என்றும் கூறினார்.

மாணவரின் கைது நடவடிக்கையால் தமிழக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அதிமுக ஈபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் பேசும்போது, “தற்போது இணையதளங்களில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவரின் மீது எவ்வளவு மோசமான, கொச்சையான விமர்சனங்கள் வருகின்றன என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போலி அடையாளங்களை வைத்துக்கொண்டு விமர்சிக்கலாம் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் நல்லதல்ல. இதை ஒரு வரையறைக்கு கொண்டுவர வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால் இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பொறுத்தவரை அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதன்மூலம் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பதாக விமர்சிப்பது தவறானது; பொருத்தமில்லாதது. நடந்த சம்பவம் குறித்து புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அரசின் நேரடி தலையீடு இருப்பதாக சொல்வது, இந்த அரசை எதிர்ப்பவர்களின் தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறினார்.