சிறப்புக் களம்

“அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்” - மதுரையில் போஸ்டர்கள்

“அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்” - மதுரையில் போஸ்டர்கள்

webteam

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. ஆனால் அவரது தந்தை மட்டும் அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என ரசிகர்களுக்கு தகவல் கொடுப்பார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் அறிவிப்புக்கு பின் தங்களது தலைவரும் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற ஆசை விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, கொடி அறிமுகம் செய்து வழிநடத்தி வருகிறார். முழுமையான இயக்கமாக அது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் இயக்கத்தின் இணையதளம் தொடங்கப்பட்டு பலரையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கும் அரசியிலுக்கும் தொடர்பில்லை என்றே அமைப்பை சேர்ந்தவர்கள் கூறினார்.

இப்படி எந்தப் பிடியும் கொடுக்காமல் ஓடிக் கொண்டிருந்த விஜய் சமீப காலமாக அரசியல் பேசத் தொடங்கியுள்ளார். சமீபத்திய‘மெர்சல்’ படம் அதற்கு உதாரணம். தமிழக பாஜகவையே அலற விட்டு, இலவச புரமோசன் பெற்றுக் கொண்டவர். இப்படிப்பட்ட விஷயங்கள் அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கும் என ரசிகர்களை நம்ப வைத்தது. ஆனால் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியானார். தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்.

மதுரை முழுக்க இன்றைக்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. “ஜூன் 22-ல் முடிவெடுக்கிறார் விஜய்” என்ற வாசகம் அதில் இடம்பெற்றிருக்கிறது. ‘தின விஜய்’ நாளேடு என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சுவரொட்டிகளில் அதன் நிறுவனர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம் என்றும் கூடுதல் ஹைப் ஏத்துகின்றன அந்தச் சுவரொட்டிகள். இதோடு “மக்கள் மகிழ்ச்சி, கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரை உலகினர் வாழ்த்து” என்ற பஞ்ச் வசனங்களும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

மதுரையின் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்தச் சுவரொட்டிகளை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அரசியல் மாற்றங்களின் களமாக மதுரை மாறிப் போயிருக்கிறது. கமல் தனது ‘மக்கள் நீதி மய்ய’த்தின் அறிவிப்பை அங்குதான் வெளியிட்டார். டிடிவி தினகரனின் அமமுகவும் அங்குதான் பிறந்தது. விஜய்யின் கட்சியும் ஏன் அங்கே அறிவிக்கப்படக் கூடாது என்ற கேள்வி மதுரைவாசிகளுக்கு எழுந்திருக்கிறது. விஜய் உண்மையிலேயே கட்சி அறிவிப்பை வெளியிடுகிறாரா என அவரது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கேட்டோம். “விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம், ஆனால் இப்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. அதே சமயம் மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை பொருத்தவரை, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருக்கும் இளம் ரசிகர்களின் எண்ணம். அவர்களே இதனைச் செய்திருக்கின்றனர் “ என்றார்கள்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களின் விருப்பம். நிறைவேற்றுவாரா விஜய் ?