சுற்றுச்சூழல்

கோவை: யானைகளின் சாணத்தில் நெகிழிக் குப்பைகள் - வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி

JustinDurai

கோவை அருகே மலைப்பாதையில் யானைகளின் சாணத்தில் நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மருதமலை செல்லும் வழியில் கிடந்த யானைகளின் சாணத்தில் நெகிழிப் பைகள் உள்ளிட்டவை ஏராளமாகக் கலந்திருந்தன. இவற்றை ஆராய்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளனர். வனத்தை ஒட்டிய மற்றும் யானைகளின் வழித்தடங்களில் வசிப்போர் வீசும் நெகிழிக் குப்பைகளை உண்ணும் நிலைக்கு யானைகள் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

யானைகள் உண்ட நெகிழிப் பொருள்கள் செரிமானம் ஆகாமல் அப்படியே வெளியேறியுள்ளதாகவும், இதனால் யானைகளின் இரைப்பை புண்ணாகி செரிமான மண்டலமே பாதிக்கப்படும் என்றும் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே வனத்தின் பேருயிரான யானைகளைப் பாதுகாக்க அவை நடமாடும் பகுதிகளில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.