சுற்றுச்சூழல்

6 மாதத்திற்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

kaleelrahman

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட வேடந்தாங்கலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும். பின்னர் சரணாலயத்தில் தங்கியிருந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். இந்த ஆண்டு விட்டுவிட்டு மழை பெய்துவருவதால் வேடந்தாங்கல் ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்ததன் காராணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மறுஅறிவிப்பு வரும்வரை சரணாலயம் மூடப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.