சுற்றுச்சூழல்

மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழந்தால் டான்ஜெட்கோதான் பொறுப்பு : பசுமை தீர்ப்பாயம்

Veeramani

மின் கம்பியை மிதித்து வனவிலங்குகள் உயிரிழப்புக்கு டான்ஜெட்கோ தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக வனத்துறைக்கு இழப்பீடாக ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ வழங்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

நீலகிரி - பந்தலூர் வனப்பகுதியில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயரை மிதித்த ஒரு ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை இறந்து போனதாக பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மின் கம்பியை மிதித்து ஏற்படும் வனவிலங்குகள் உயிரிழப்புக்கு டான்ஜெட்கோ தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக வனத்துறைக்கு இழப்பீடாக ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ வழங்க வேண்டும். இந்த தொகையை மின் தாக்குதலிலிருந்தும், மனிதர்கள் வேட்டையாடுவதிலிருந்தும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும். வனப்பகுதியில் மின்சார வயர்கள் அறுந்து விழும்பட்சத்தில் தானாகவே மின்சாரம் தடைபடும் வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

மேலும், பூமிக்கடியில் மின்சார வயர்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அப்பகுதிகளை வனவிலங்குகள் கடக்கும்போது தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.