சுற்றுச்சூழல்

மீண்டும் பரவும் பன்றிக் காய்ச்சல்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

webteam

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரையிலான ஒரு மாதத்தில் மட்டுமே, தமிழகத்தில் 132 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் இருந்தன. இதையடுத்து சுகாதாரத் துறையின் தொடர் நடவடிக்கைகளால் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே இந்நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை, மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதில், “காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும், சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி, தொண்டை வலி இருப்பின் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும், பன்றிக் காய்ச்சலை தடுக்க தேவையான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அச்சம் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1038 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.