சுற்றுச்சூழல்

ட்ரோன்கள் மூலம் தமிழக கனிமவள சுரங்கங்களை அளவீடு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

Veeramani

தமிழ்நாடு முழுவதும் கனிமவள சுரங்கங்களுக்கு உரிமத்தொகையை நிர்ணயிக்க, ட்ரோன்கள் மூலம் சுரங்கங்களை அளவீடு செய்ய வேண்டுமென மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை - வாளையார் வனப்பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில், சிமெண்ட் உற்பத்திக்காக சுண்ணாம்புக் கல் எடுப்பதற்கான உரிமத் தொகையை அதிகரித்து கனிமவளத்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சிமெண்ட் நிறுவனங்கள் 2002 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு கோரிய உரிமத்தொகையை செலுத்திட சிமெண்ட் ஆலைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரர்கள் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடங்களை ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை மதிப்பிடவும், உரிமத் தொகையை நிர்ணயிக்கவும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுரங்கங்களின் நடவடிக்கைகளையும், ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் நாட்டு மக்களுக்கு சொந்தமான செல்வங்கள் என்றும், அவை பேராசை கொண்டவர்களால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாதென்றும் நீதிபதி குறிப்பிட்டார். தேசத்தின் செல்வத்தையும் பொது நலனையும் பாதுகாப்பதில் சமரசம் செய்ய முடியாதென்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுகளை செயல்படுத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.