சுற்றுச்சூழல்

சத்தியமங்கலம்: இரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்

kaleelrahman

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்தபடி சாலையின் நடுவே நடமாடியது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதேபோல் மற்றொரு காட்டுயானை சாலையோரத்தில் முகாமிட்டபடி வெகுநேரம் நின்றிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் லாரி கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்ற போதிலும் வாகனங்கள் செல்வதைப் பற்றி கவலைப்படாமல் அந்த காட்டு யானை சாலையில் நின்றிருந்த காட்சியை வாகன ஓட்டிகள் கண்டு மகிழ்ந்தனர்.

இரவு நேரங்களில் காட்டுயானைகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் வனப்பகுதியில் யானைகளை கொசு கடிப்பதால் கொசுக்கடி தாங்கமுடியாமல் ஒருசில யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.