சுற்றுச்சூழல்

பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவுமா? - விஜயபாஸ்கர் பதில்

webteam

பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திருவப்பூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமோ, கவலையோ படத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரையில் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

பிராய்லர் கோழிகள் சாப்பிடுவதாலும் முட்டைகள் சாப்பிடுவதாலும் கொரோனா வைரஸ் பரவுவது இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிராய்லர் கோழி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம். அப்படி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற தகவல்களை யாரும் நம்பவும் வேண்டாம். கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம்” என்று கூறினார்.