சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில், சாலையோரம் மலைபோல் கொட்டிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழைய பொருட்கள் வாங்கும் கடை மற்றும் தனியார் வாகனங்களை பழுது பார்க்கும் தேவையற்ற பொருட்கள் மலைபோல் குவிந்து கிடப்பதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், டெங்கு தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுபோன்று பழைய பொருட்கள் குவிந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பூவிருந்தவல்லி நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.