சுற்றுச்சூழல்

நியூட்ரினோ திட்டம்: காட்டுயிர் அனுமதிகோரும் மனுவை அரசு நிராகரிக்க தினகரன் கோரிக்கை

Veeramani

தேனி நியூட்ரினோ ஆய்வக திட்டத்துக்கு காட்டுயிர் அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக காட்டுயிர் அனுமதி (Wildlife Clearance) கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைத்து எந்த காரணம் கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்