சுற்றுச்சூழல்

இயற்கை எழில் கொஞ்சும் திருச்சியை உருவாக்கும் முயற்சியில் ’மியாவாக்கி காடுகள்’

kaleelrahman

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அடர்வன காடுகளை உருவாக்கும் முயற்சியாக, 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வனமாக்கும் லட்சியத்தோடு திருச்சி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இயற்கை வளங்கள் அழிந்தற்கு மனிதனே மிகப்பெரும்காரணம். தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழிக்கேற்ப இயற்கையை அழித்ததன் விளைவுகள் இன்றைக்கு பல இயற்கை பேரழிவுகளை மனிதன் சந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்த இயற்கை பேரழிவில் இருந்து நம்மை காக்க தனிமனிதர்களாகவும், சமூக அமைப்புகளாகவும் பலர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனிமனிதனும், சமூக ஆர்வலர்களும் செய்து கொண்டிருக்கும் இந்த ஒவ்வொரு சிறு செயலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு விடையாய். காடுகளை உருவாக்கினால் முடியும் என்று பதில் அளித்து அதனை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார் ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி. இவரின் பெயரால் உருவாக்கப்பட்ட அடர்வன காடுகளுக்கு 'மியாவாக்கி காடுகள்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

மியாவாக்கி முறையில் குறைவான பரப்பளவில் அதிகமான மரக்கன்றுகளை நடவு செய்வதே மியாவாக்கி முறை. 10 ஆண்டுகளில் வளரக்கூடிய மரங்கள் இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து விடுகின்றன. பூமி வெப்பமாதலை குறைப்பதற்கு இது உதவுகிறது. காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்க முடியும். கடற்கரை பகுதிகளில் இதுபோன்ற காடுகள் உருவாக்கப்பட இயற்கை பேரிடர்களில் இருந்து தடுக்கலாம். பறவைகள் பூச்சிகள் தேனீக்களின் வாழ்விடமாக அமைவதால் உயிர் சூழல்களும் மேம்படுத்தப்படும்.

உலக அளவில் பரவலாக மியாவாக்கி காடுகள் முறை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் இந்த முறை அதிகமாக கையாளப்படுகிறது. திருச்சியில் மியாவாக்கி காடுகள அதிகளவில் உருவாக்கப்படுகின்றன.