இந்தியாவிலிருக்கும் மக்கள் தொகைக்கு 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் குறைவாக உள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சுகாதாரத் துறையில் போதுமான வளர்ச்சி இல்லை எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்துடன் இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதிய டாக்டர்கள் இல்லை எனக் கருத்துக்கள் எழுந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக Centre for Disease Dynamics Economics & Policy என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.
அந்த ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்தியாவில் 6 லட்ச டாக்டர்கள் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 20 லட்சம் செவிலியர்கள் குறைவாகவாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகையை மருத்துவ ஊழியர்களின் குறைப்பாட்டால் நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை என அறிக்கை கூறுகிறது.
அதேபோல போதிய மருந்துகள் கிடைத்தும் அதனை நோயாளிகளால் வாங்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு நோயாளிகள் அதிகம் செலவு செய்யவேண்டியதே காரணமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 65% செலவுகள் மருத்துவதிற்காக மக்கள் செலவு செய்கின்றனர். இந்த மருத்துவ செலவால் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர்.
மேலும் இந்தியாவில் 10,189 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அளவு உலக சுகாதார மையம் வகுத்துள்ள அளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதிக மருத்துவர்கள் குறைபாடு இருப்பது தெரிகிறது. அதாவது உலக சுகாதார மையத்தின் அளவின்படி 1000 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் இருக்கவேண்டும். இந்த அளவின்படி பார்த்தால் இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் குறைவாக உள்ளனர். அதேபோல 483 மக்களுக்கு ஒரு சேவிலியர் இருக்கவேண்டும் என உலக சுகாதார மையம் வகுத்துள்ளது. இதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் 2 மில்லியன் சேவிலியர்கள் குறைவாக உள்ளனர்.