சுற்றுச்சூழல்

தமிழகம், புதுச்சேரியில் 2300 சதுர கிலோ மீட்டரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி..!

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 2 ஆயிரத்து 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்ததற்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில், தமிழகத்தின் திருவாரூர், நாகை, கடலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூர் மற்றும் நாகையில் ‌74 புள்ளி 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடலூர் மற்றும் நாகையில் 386 புள்ளி 53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் 73 புள்ளி 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆயிரத்து 259 புள்ளி 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், கடற்பகுதியில் 143 புள்ளி 97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு‌ அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பதிலானது மாநிலங்களவையில் வழங்கப்பட்டுள்ளது.