சுற்றுச்சூழல்

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை

Veeramani

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நொய்டா உள்ளிட்ட எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்றுமாசு காரணமாக சமீபத்தில் மாநில அரசு நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இன்று முதல் டெல்லி போலீசார் தீவிர தணிக்கையை தொடங்கிய சூழலில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை மட்டும் கொண்டுவரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். மற்ற வாகனங்கள் அப்படியே திருப்பி விடப்படுகிறது.

இதன் காரணமாக மற்ற வாகனங்களாலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறும்போது, காற்று மாசு காரணமாக டெல்லி அரசு கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு தடை விதித்து உள்ளது. இதனால் நாங்களும் தீவிரமாக தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தனிநபர் வாகனங்களாக இருந்தாலும் கூட பயண காரணங்களை கேட்டப்பின்னரே உள்ளே நுழைய அனுமதி வழங்குவதாக கூறுகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற இதர பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டெல்லியின் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டு சிஎன்ஜி பயன்பாட்டில் உள்ள சிறிய வாகனங்கள் மூலமாக மீண்டும் டெல்லிக்குள் எடுத்து செல்லப்படுகிறது. டெல்லி அரசு மாநிலத்திற்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இன்று 1000 சிஎன்ஜி பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.