சுற்றுச்சூழல்

உடல்நலக்குறைவால் தனியார் தோட்டத்தில் மயங்கி விழுந்த பெண் யானை - வனத்துறையினர் சிகிச்சை

Veeramani

கோவையில் வனத்தை ஒட்டிய தனியார் தோட்டத்தில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்துள்ள பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் படுத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலையடுத்து அங்கு சென்றுள்ள வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். 32 முதல் 35 வயதுடைய பெண் யானை, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் மயங்கி விழுந்துள்ள யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.