ஆப்பிள் Pt web
சுற்றுச்சூழல்

கொடைக்கானலையும் விட்டுவைக்காத காலநிலை மாற்றம்.. காப்பாற்றப்படுமா கோடை ஆப்பிள்?

உலகெங்கும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், குளுகுளு கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சலையும் விட்டுவைக்கவில்லை.

PT WEB

புவி வெப்பமயமாதல் காரணமாக மலைப்பகுதிகளில் குளுமை குறைந்து வருவதால், கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கொடைக்கானலில் அமோக விளைச்சல் கண்ட கோடை ஆப்பிள் மரங்கள், கொஞ்சம் கொஞ்சமாக காய்க்கும் திறனை இழந்து வருகின்றன. பச்சையும், செந்நிறமும் கலந்த, தித்திக்கும் ஆப்பிள் வகைதான் கோடை ஆப்பிள். முன்பெல்லாம் ஒரு மரத்தில் சுமார் 100 கிலோ அளவுக்கு காய்த்த ஆப்பிள் பழங்கள், தற்போது ஒரு கிலோ, இரண்டு கிலோ காய்ப்பதே அரிதாகிவிட்டது.

40 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான மரங்களுடன் விளைச்சல் கொடுத்துவந்த, தோட்டக்கலை ஆப்பிள் பண்ணை, தற்போது ஒரு ஆப்பிள் மரம்கூட இல்லாமல், ரோஜா பூங்காவாக மாறி சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமாக இருப்பதும் அதற்கு சான்று. ஆப்பிள் மரங்களின் பூக்கள் பூக்கும் மார்ச் மாத காலகட்டத்தில், ஏழு டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே தேவை. ஆனால் சமீப ஆண்டுகளாக, அக்காலகட்டத்தின் வெப்பநிலை சராசரியாக 10 டிகிரி அளவிற்கு உயர்ந்துள்ளதால், பூக்களின் மொட்டுகள் விரியும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் குன்றுவதாக கூறுகின்றனர் தோட்டக்கலை துறை அதிகாரிகள்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, கோடை ஆப்பிள் வகையின் நாற்று உற்பத்தியையும், நடவு காலகட்டத்தையும், அறிவியல்ரீதியாக மேம்படுத்தும் முயற்சிகள், தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது கோடை ஆப்பிளை காப்பாற்ற நிச்சயம் உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்