சுற்றுச்சூழல்

அதிகரிக்கும் காற்றின் மாசு அளவு - நஞ்சாகும் சென்னை நகரம்

webteam

சென்னை நகரின் காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. 

சென்னை நகரில் நிலவும் காற்றின் மாசு அளவு குறித்த ‘ஏர் குவாலிட்டி இண்டக்ஸ்’ என்னும் அறிக்கையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சென்னை நகரிலுள்ள அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்றின் மாசு அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் காற்றின் மாசு அளவு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் காற்றில் கலந்துள்ள மாசுவின் அளவு சில நாட்கள் மட்டுமே குறைந்து காணப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கடந்த 2016-17 ஆண்டு நிலவிய காற்றின் மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது தற்போது காற்றின் மாசின் அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பிஎம்-10 மாசு அளவு 173 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவீட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.  

குறைந்தபட்சமாக அடையாறு பகுதியில் இந்த மாசுவின் அளவு 107ஆக உள்ளது. சென்னையில் நிலவும் காற்றின் மொத்த மாசுவின் அளவு சராசரியாக 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டராக உள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னையில் பிஎம்-10 மாசு அதிகரித்ததற்கு, அதிகப்படியான வாகன போக்குவரத்தும் இவற்றால் ஏற்படும் புழுதியுமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் அனுமதிக்கப்பட்ட மாசுவின் அளவு பிஎம்-10க்கு  60மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர், பிஎம்-2.5க்கு 40மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். 

சென்னையிலுள்ள பிற பகுதிகளிலும் பிஎம்-10 மாசுவின் அளவு 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகமாகவே உள்ளதாக இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட சோதனைகளில் பதிவாகி இருக்கிறது. அதன்படி தி.நகரில் 138, அண்ணா நகரில் 161, கீழ்ப்பாக்கத்தில் 128 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு காற்றில் மாசு கலந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.