சுற்றுச்சூழல்

போகிப் பண்டிகை: கடந்த ஆண்டை விட சென்னையில் குறைவாக பதிவான காற்று மாசின் அளவு

EllusamyKarthik

தமிழ்நாட்டில் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்து அதனடிப்படையில் காற்று மாசு அளவு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். அதில் கடந்த ஆண்டை (2021) விட நடப்பாண்டு (2022) காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக சென்னையின் 15 மண்டலங்களில் காற்றின் தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின்படி 12.01.2022 காலை 8 மணி முதல் 13.01.2022 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில் காற்றில் கலந்துள்ள கந்தக-டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராமி/கனமீட்டருக்கு உட்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்று தர குறியீட்டை (Air Quality Index -AQI) பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக தேனாம்பேட்டையில் 62 ஆகவும் (திருப்திகரமான அளவு) மற்றும் அதிகபட்சமாக மாதவரத்தில் 91 ஆகவும் (திருப்திகரமான அளவு) இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று தர குறியீட்டை பொருத்தமட்டில் 51 - 100 வரையில் காற்றின் தரம் இருந்தால் அது திருப்திகரமான அளவு. இதனால் மிகவும் சென்சிட்டிவான மக்களுக்கு லேசான மூச்சு திணறல் இருக்கக்கூடும் என அதன் ஆரோக்கிய பாதிப்புகள் தெரிவிக்கின்றன.