சென்னை நகரின் ஐந்து முக்கியப் பகுதிகள் நாள்தோறும் உள்வாங்கி வருவதாக ஐஐஎஸ்இஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இதன்படி, போரூர், மதுரவாயல், கொடுங்கையூர், சேப்பாக்கம் மற்றும் பனையூர் ஆகிய பகுதிகள் ஆண்டுக்கு 3 மில்லிமீட்டர் முதல் 15 மில்லிமீட்டர் வரை உள்வாங்கி வருகின்றன. குறிப்பாக, போரூர் மற்றும் மதுரவாயலுக்கு இடைப்பட்ட 18 சதுர கிலோமீட்டர் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு 15 மில்லிமீட்டர் வரை நிலம் மூழ்கி வருகிறது.
சென்னை விமான நிலையம் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளும் ஆண்டுக்கு 3 முதல் 10 மில்லிமீட்டர் வரை உள்வாங்குகின்றன. மென்மையான களிமண் தரை, புவியியல் காரணிகள் மற்றும் அதிவேக நகரமயமாக்கலின் எடையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனுடன் சேர்ந்து, சென்னைக் கடற்கரையோரம் கடல் மட்டம் ஆண்டுக்கு 2 புள்ளி 8 மில்லிமீட்டர் உயர்ந்து வருகிறது. இந்த இரட்டைப் பாதிப்புகளால், வரும் 2,100ஆம் ஆண்டுக்குள் நகரின் 140 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2030இல் 24.5 லட்சமாக இருக்கும் நிலையில், 2100இல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 98.5 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமான வெள்ள அபாயப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. முறையான வடிகால் அமைப்பு, சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் நகரத் திட்டமிடலில் நிலம் உள்வாங்குவதைக் கணக்கில் கொள்வதே இதற்குத் தீர்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.