சுற்றுச்சூழல்

முதல் தமிழரின் முதல் வெற்றி !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக கே.சிவன் பொறுப்பேற்ற பின், ஜி.எஸ்.எல்.வி. எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இஸ்ரோ தலைவராக ஒரு தமிழர் பொறுப்பேற்று இருப்பது இதுவே முதல் முறை. எனவே, கே.சிவனின் இந்த வெற்றி பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இஸ்ரோ தலைவராக கடந்த ஜனவரி 10-ஆம் தேதி சிவன் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவருடைய தலைமையில் அனுப்பப்படும் முதல் திட்டம் ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட் ஏவும் திட்டமாகும். எதிர்காலங்களில் அவர் தலைமையில் அடுத்தடுத்து பல்வேறு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. 

அடுத்ததாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 செயற்கைக்கோளை அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவல் தொடர்புக்கான ஜிசாட்-2 செயற்கைக்கோள், பிரஞ்ச் கயானா விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதில் மிக முக்கியமானதாக நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ வரும் அக்டோபரில் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. 3,290 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்10 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட  உள்ளது. தொடர்ந்து கிராமப்புறங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்த கிராம வள மையங்களுக்கு உதவும் வகையிலான ஜிசாட்-29 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.