சுற்றுச்சூழல்

விதிகளை பின்பற்றாத ரயில்வே: உயிரிழக்கும் யானைகள் - சிஏஜி அறிக்கை சொல்வதென்ன?

JustinDurai
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 50 வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்கிற விதியை ரயில்வே மண்டலங்கள் பின்பற்றுவதில்லை என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் இறந்துள்ளதாக ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தில் 37 யானைகளும், அடையாளம் காணப்படாத வழித்தடத்தில் 24 யானைகளும் ரயில்களில் அடிபட்டு மரணமடைந்துள்ளன.
ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்திலிருந்து மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எனினும் ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவம் தொடர்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யானை நடமாட்டம் உள்ள பகுதி என அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் வேகக் கட்டுப்பாடுகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவில்லை என்றும் வழித்தடத்தின் குறுக்கே யானை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் மணிக்கு 50 வேகத்தில் மட்டுமே ரயில் செல்ல வேண்டும் என்கிற விதியை ரயில்வே மண்டலங்கள் பின்பற்றுவதில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்திற்கு வசதியாக ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சுரங்கப்பாதை/மேம்பாலம் அமைப்பதற்கு வனத்துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் யானை நடமாட்ட உள்ள பகுதியாக குறிப்பிடும் போர்டுகள் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓட்டுனர்கள் கவனமாக ரயிலை இயக்கினாலும் விபத்து நேர்ந்து விடுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.