சுற்றுச்சூழல்

‘இதயமே! இதயமே!’- ஓய்வின்றி துடிக்கும் இதயத்தை பாதுகாப்பது எப்படி?  

‘இதயமே! இதயமே!’- ஓய்வின்றி துடிக்கும் இதயத்தை பாதுகாப்பது எப்படி?  

webteam

நாம் பிறப்பதற்கு முன்பே நமக்காக துடிக்கத் தொடங்கும் இதயம், நாம் வாழும் காலம் வரை ஓய்வின்றி துடித்துக்கொண்டே இருக்கிறது. உடலின் மிக முக்கியமான உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இதயத்தின் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக 'உலக இதய தினம்' செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

இதய நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் இதயம் தொடர்பான நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். 1.1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் வெளியில் சென்று விளையாடுவதுக் கூட இல்லாமல் போய்விட்டது. சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். செல்போன்கள், சமூக வலைத்தளங்கள் என இன்றைய தலைமுறை தூக்கத்தையும் தொலைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

சரியான உணவு உட்கொள்ளாதது, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாதது, சரியான தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் உண்டாவது ஆகியவை இதய நோயின் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்றைய இளைஞர்களுக்கு இதய நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

இதயத்தை பாதுகாக்க சில வழிகள்:

  • சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகள் உண்ணுதல்
  • உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.
  • சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.
  • ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது
  • எண்ணெய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது
  • சிகரெட், மது வகைகளை தவிர்ப்பது
  • நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.