கல்வி

நிவர் புயல்: யோகா மற்றும் இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

webteam

நிவர் புயல் காரணமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் யோகா கல்லூரியில் நடக்கவுள்ள கலந்தாய்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக நிவர் புயல் காரணமாக அத்தியாவசியப் பணிகளை தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு இன்று பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.