கல்வி

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள்

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள்

webteam

ஐஐடிகளில் கூடுதலாக ஆயிரம் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், மாணவர்களை படிக்க வைக்க வகுப்புகள் மற்றும் தங்க வைக்க விடுதி ஆகியவை இல்லை என ஐஐடி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.  

ஐஐடிக்களில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 1000 இடங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வை நடத்தும் சேர்க்கை வாரியமும், பெண்களுக்கென 14% ஒதுக்கீடு அளித்து இடங்களில் எண்ணிக்கையை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் போது அவர்களுக்கான வகுப்பறை, விடுதி ஆகியவை உள்ளனவா என பார்க்க வேண்டுமென காந்திநகர் ஐஐடி இயக்குநர் சுதிர் ஜெயின் தெரிவித்துள்ளார்.  

குறிப்பாக கடந்த ஆண்டில் ஐஐடி மும்பை சார்பில் சில புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஐஐடியும் சில புதிய வகுப்புகளையும் சிறப்பு பயிற்சிகளையும் வழங்குகின்றன. இத்தகைய சூழலில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதால் வகுப்புகளும் விடுதிகளும் நிரம்பி வழியும் என்றும் அது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்றும் சுதிர் ஜெயின் கூறினார்.

இது தொடர்பாக பேசிய ஐஐடி மும்பை இயக்குநர் தேவங் காகர், தங்களது கட்டடங்களில் 8000 மாணவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்ற சூழலில் தற்போது 10400 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதிய கட்டடங்கள் இல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது தங்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். அதே நேரத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த கூட தயங்குவதாகவும் தேவங் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ஐஐடியிலும் ஒருவருக்கான அறையில் இரண்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டும், வகுப்புகள் நேரம் மாற்றப்பட்டும் நிலைமை சமாளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஐஐடிக்களுக்கு நடைபெற்ற சேர்க்கை 23 கட்டங்களாக நடைபெற்றும் 121 இடங்கள் காலியாக இருந்தது. 2016-ல் காலியிடங்கள் 96ஆகவும் , 2015-ல் 50 ஆகவும் இருந்த இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாணவர்கள எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமா என மத்திய அரசு யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட படிப்புகளை மாணவர்கள் புறக்கண்ணிப்பதும் அதிகரித்துள்ளதால், அவற்றை கண்டறிந்து புதிய படிப்புகளை புகுத்துவது மாணவர் சேர்க்கைக்கு உதவும்.