கல்வி

7.5% இட ஒதுக்கீட்டின் பின்னணியில் உச்சரிக்கப்படாத இரு நாயகர்கள்

Veeramani

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலர் செல்வராஜன் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இது தொடர்பாக தனது முகநூலில் எழுதியுள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கோ.சரவணன் “மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் மருத்துவர். நாராயண பாபு, மருத்துவர். செல்வராஜன் 7.5% இட ஒதுக்கீட்டின் பின்னணியில் இருந்த உச்சரிக்கப்படாத நாயகர்கள். இருவரும் அரசுப்பள்ளியின் பிள்ளைகள். சவாலான புறச்சூழல்களை கல்வி, உழைப்பின் துணைகொண்டு வென்று இந்த இடத்தினை அடைந்தவர்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான கனவிற்கு தங்களை ஒப்புக்கொடுத்துக் கொண்டார்கள். அதற்கான முனைப்பான முயற்சிகள், தரவுகள் சேகரிப்பு, உழைப்பு என அயராது இயங்கினார்கள். எப்போது ஒப்புதல் வரும் என அவர்களிடையே நிலவிய பதைபதைப்பை கண்ணெதிரில் கண்டபோது கண்ணீர் துளிர்த்தது.

இதோ இன்றைக்கு அரசுப்பள்ளி மாணவர்களிடம் சுயநிதி மருத்துவ/பல் மருத்துவக் கல்லூரிகள் இடம் மறுக்கக்கூடாது, அவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே முழுவதும் செலுத்தும் எனும் உத்தரவு வெளியாகியிருக்கிறது. அரசு, எதிர்க்கட்சிகள், குடிமைச்சமூகம் ஆகியோரோடு நன்றியோடு இவ்விரு மருத்துவர்களும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்” என்று தெரிவித்துள்ளார்