கல்வி

அரசின் எச்சரிக்கையை மீறி இன்று இயங்காத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 987!

webteam

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் போராட்ட அழைப்பின்படி, 987 பள்ளிகள் மட்டுமே திறக்கப்படவில்லை என்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து, பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று தெரிவித்திருந்தது. ஆனால், பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 18) 91 சதவிகித பள்ளிகள் வழக்கம்போல இயங்கியதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 9 சதவிகித பள்ளிகள் மட்டுமே, இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே திறக்கப்படவில்லை என்றும் 10,348 பள்ளிகள் வழக்கம்போல இயங்கியதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் (100%) வழக்கம்போல இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல இயங்கும் என்றும்,போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.