கல்வி

'தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே'- பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அமலில் இருக்கும் இருமொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தாய்மொழியாகிய தமிழ் மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருவதாகக் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டின் சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாகக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது பேசும் மாணவர்கள் தமிழ்மொழியுடன் சேர்த்து, அவர்களது தாய்மொழியையும் விருப்பப்பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, தமிழக அரசால் ஐயமின்றி தெளிவுபடுத்தப்பட்ட மொழிப்பாடக் கொள்கை குறித்த உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.