கல்வி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் வேலைவாய்ப்புப் பதிவு

webteam

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் ( அக்டோபர் 23) பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலைவாய்ப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே அந்த மாணவர்களின் கல்வித்தகுதியை அவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து மேற்கொள்ள சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும்.

மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப் பேசி எண்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும். மாணவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை முகவரிக்கான அடையாள அட்டையாகக் கருதவேண்டும். நாளை தொடங்கும் வேலைவாய்ப்புப் பதிவுப் பணிகள் நவம்பர் 6 ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.