கல்வி

தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

kaleelrahman

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ்ன்று முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து பொது முடக்கத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைகளை வழங்கிய பின்னரே பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், பள்ளிகள் தொடங்கப்பட்டு ஒரு வாரத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் முழு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் கண்ணப்பன் தெரிவித்தார்.