கல்வி

ஆவணங்களை மறைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம் - ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் குற்றச்சாட்டு

webteam

விசாரணைக்குழு கேட்கும் ஆவணங்களை அண்ணா பல்கலை கழகம் மறைக்கிறது என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் மீது ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை பொதிகை இல்லத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தினமும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் சூரப்பா மீது விசாரணை ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேட்கின்ற ஆவணங்களை பல்கலைகழகம் தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கெனவே உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 3 மாதங்களுக்குள் இந்த விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி பிப்ரவரி மாதம் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத இறுதியிலேயே அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.