கல்வி

பட்டப்படிப்பில் சேராமல் பட்டம் பெற முயன்ற 117 பேர்: நடவடிக்கை எடுத்த சென்னைப் பல்கலை

நிவேதா ஜெகராஜா

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில், ‘தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள்’ என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 117 பேர் தற்போது பிடிபட்டுள்ளனர். 1980-1981-ம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

அத்திட்டத்தை பயன்படுத்தி தொலைதூரக் கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது வெளிச்சத்துக்கு வந்தது.

117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் முன் அவர்களின் செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த பல்கலைக்கழக நிர்வாகம், 117 பேரின் பெயர்கள் இல்லாததால் அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர, வேறு பலரும் முறைகேடாக தேர்வு எழுதினார்களா? என்பது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி ஆணையிட்டுள்ளார்.