கல்வி

குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!

Sinekadhara

பரமக்குடியில் நடைபெற்ற குரூப்-2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்து தேர்வு எழுதிய தேர்வர் போலீசாரால் வெளியேற்றப்பட்டு தொடர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு அறை வீதம், 30 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 600 மாணவர்கள் தேர்வு எழுத போலீசார் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கு நடைபெற்ற தேர்வில் 64 பேர் தேர்வு எழுத வரவே இல்லை.

தேர்வுக்கு செல்போன் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வில் பங்கேற்ற நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தேர்வு எழுதும்போது தன்னுடன் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து மறைத்து வைத்திருந்துள்ளார். இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் அவரை தேர்வு எழுத விடாமல் தேர்வு அறையில் இருந்து போலீசாரை அழைப்பித்து வெளியேற்றினர்.

அவர் வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து செல்போனை ஆய்வுசெய்து அவருடைய முகவரியை வாங்கிக்கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.