கல்வி

இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்; முதல்வர் ஸ்டாலினை தோளில் தட்டி நலம் விசாரித்த பிரதமர்!

rajakannan

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் வந்த பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அமரர் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஐந்து பாகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பரிசாக மோடிக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.

பின்னர், பல்கலைக்கழக விழா மேடைக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் காந்தி தொப்பியை அணிந்து வந்தனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் முதல்வர் ஸ்டாலினை தோளில் தட்டி நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. இருவரும் பரஸ்பரம் சில நிமிடங்கள் உரையாடினர். பின்னர் தங்கப்பதக்கம் வாங்கிய சில மாணவர்களுக்கு பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கினார்.

பின்னர், இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. அதேபோல், மிருதங்க கலைஞர் உமையாள்புரம் சிவராமனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெறும்போது இளையராஜாவும் தொப்பி அணிந்து வந்திருந்தார்.

முன்னதாக, காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட மாநகர காங்கிரஸார் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.