கல்வி

தனித்தேர்வர்கள் தேர்ச்சி : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Veeramani

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது போல தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரியும், துணைத்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரியும் இரு மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அரசு, அனைவரும் தேர்ச்சி என கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இந்த உத்தரவின் பலனை தனித்தேர்வர்களுக்கும் வழங்கக் கோரி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சிறு மளிகை வியாபாரியான ஆனந்தராஜின் மகன் பிளஸ்வின் என்ற தனித்தேர்வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2020ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதாகவும், ஒரே வகையான பாடத்திட்டத்தை பின்பற்றும்போது, பள்ளி மாணவர்கள் என்றும், தனித்தேர்வர்கள் என்றும் பாகுபாடு காட்டுவது தவறு எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரி, சென்னை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த எஸ். அஜய் தாஸ் என்ற மாணவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 2019 ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொது தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்ததாகவும், பின்னர் ஜூன் மாதம் நடத்தபட்ட துணைத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள இரண்டு பாடங்களை 2020ம் ஆண்டு எழுத திட்டமிட்டிருந்த நிலையில், கொரனோ பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இரு ஆண்டுகளாக துணைத்தேர்வுகள் நடத்தாதது மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். துணைத்தேர்வு நடத்தக் கோரி பள்ளி கல்வி துறை செயலாளருக்கு அனுப்பிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.