கல்வி

“பச்சமலையில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும்”-பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் கோரிக்கை

Rasus

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட துறையூர் அருகிலுள்ள பச்சமலையில் சைனிக் பள்ளி அமைக்க அத்தொகுதி எம்பி பாரிவேந்தர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை பாரிவேந்தர் முன்வைத்தார். நாடெங்கும் 100 சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை ஒரு கல்வியாளராக வரவேற்பதாக அமைச்சரிடம் அளித்த கோரிக்கை கடிதத்தில் டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

சைனிக் பள்ளிகளில் நியாயமான கட்டணத்தில் சிறந்த கல்வி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள பாரிவேந்தர், இப்பள்ளிகள் மாணவர்களை கல்வி, உடல் திறன், மன நல ரீதியாக வலிமையானவர்களாக உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். புதிதாக அமைக்கப்படவுள்ள 100 சைனிக் பள்ளிகளில் ஒன்றை தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான பச்சமலையில் அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்