கல்வி

2022 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெறும் 14 % பேர் மட்டும்தான் தேர்ச்சி!

webteam

தமிழகத்தில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இணைய வழியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1,53,233 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், இணையத்திலிருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விண்ணப்பதாரர்கள் அளித்த விபரத்தை பதிவிட்டு, சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.