கல்வி

’பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்குங்கள்’ - மருத்துவத்துறை

Sinekadhara

பள்ளி மாணவ மாணவிகளுக்கான இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் வழங்கும் பணியை மீண்டும் துவக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொண்ட குழந்தைகள் சிலருக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதால் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்குவது தற்காலிகமாக கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மருந்துகள் முறையாக ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்தின் தரம் சரிபார்க்கப்பட்டது. எனவே நாளை முதல் மீண்டும் மாணவர்களுக்கான இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் பணியை துவங்குமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், பிறந்து 6 மாதங்கள் முதல் 19 வயதினர் வரை பல்வேறு வகைப்படுத்தலின் கீழ் சரியான அளவு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்களை வளர் இளம்பருவத்திற்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் வாயிலாக வழங்குமாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வழங்கப்படும் வாராந்திர இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் தேவையான அளவு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவற்றை சரியாக நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் விநியோகம் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.