கல்வி

மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை... சாதித்த அரசு பள்ளி மாணவர்

மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை... சாதித்த அரசு பள்ளி மாணவர்

webteam

அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். அவருக்குச் சம்பளம் மாதம் ரூ.12 லட்சம்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவர் கிராஃபிக் டிசைனிங்கில் ஈடுபாடு கொண்டவர். ஓய்வு நேரங்களில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் போஸ்டர்களை டிசைன் செய்வதில் ஆர்வம் கொண்ட ஷர்மா, கூகுள் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனிங் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக இணையதளம் மூலம் அறிந்தார். அந்த பணிக்கு ஆன்லைன் மூலம் தனது வடிவமைப்புகள் சிலவற்றுடன் விண்ணப்பித்துள்ளார். 

இதையடுத்து ஆன்லைன் மூலம் நேர்காணலில் பங்கேற்ற ஷர்மா, பள்ளியில் படிக்கும் போதே மாதம் ரூ.4 லட்சம் உதவித் தொகையுடன் கடந்த ஓராண்டாக கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பயிற்சியின் முடிவில் அவருக்கான பணி நியமன ஆணையை கூகுள் கடந்த ஜூன் மாதத்தில் அனுப்பியுள்ளது. பணிநியமன ஆணையில் உள்ள தகவலின் படி ஹர்ஷித் ஷர்மாவுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.1.44 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக கிராஃபிக் டிசைனிங்கில் ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறும் ஹர்ஷித், ஓய்வு நேரங்களில் டிசைன் செய்வதன் மூலம் மாதம் ரூ.70,000 வரை சம்பாதித்து வந்ததாகக் கூறுகிறார். பணிநியமன ஆணையை அடுத்து இம்மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் கிராஃபிக் டிசைனர் குழுவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.