கல்வி

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

webteam

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரம் இடங்கள் உள்ளன. சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. எனவே மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான முயற்சிகளில் கல்லூரிகள் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரையில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் இணைய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.