கல்வி

அரசு கல்லூரிகளாக மாற்றம் பெற்ற 41 கல்லூரிகளின் ஊழியர்களுக்கு நிதி ஒதுக்கியது தமிழக அரசு!

webteam

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகளாக செயல்பட்டு வந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 41 கல்லூரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், `முதல் கட்டமாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட 14 கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 89 நிரந்தர மற்றும் 509 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கும், 62 நிரந்தர மற்றும் 113 தற்காலிக ஆசிரியரல்லாப் பணியிடங்களுக்கான ஊதியம் வழங்க 3 மாதத்திற்கு ரூ. 6.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட 27 கல்லூரியில் 1374 பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதத்திற்கு ஊதியமாக வழங்க 10 கோடியே 62 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டிருப்பின், அது தொடர்புடைய அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.