நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான அவசரச் சட்ட முன்வரைவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்த சட்ட முன்வரைவைச் சமர்ப்பித்தார். இந்நிலையில், தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “நீட் தேர்வு தேவையான ஒன்று. நீட் தேர்விற்கு விலக்களிக்கும் அவசரச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அரசின் முடிவால் கிராமப்புற மாணவர்கள் பயனடையப் போவதில்லை. இது கிராமப்புற மாணவர்களுக்கு ஆதரவான சட்டம் என்பது ஏமாற்று வேலை. கடைசி நிமிடத்தில் இது போன்ற சட்டம் இயற்றுவது ஏற்புடையதல்ல. இந்த சட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை பாதிக்கும். அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்” என்று அவர் கூறினார்.