கல்வி

பொறியியல் கலந்தாய்வில் புதிய நடைமுறையை கொண்டுவந்தது அண்ணா பல்கலைக்கழகம்

webteam

பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களை தவிர்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

ஒவ்வொரு ஆண்டும் தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பல மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்து விட்டு பின்னர் அந்த படிப்பில் சேராமல் தவிர்த்து விடுவதால் தொடர்ந்து பல பொறியியல் கல்லூரிகளில் அந்த காலியிடங்கள், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் பயன்படாமல் காலியாகவே இருந்து வருகிறது.

இதனை தடுக்கும் நோக்கத்தில் அண்ணா பல்கலைகழகத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 110  பொறியியல் சேர்க்கை சேவை மைய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு  பயிற்சியை வழங்கிவிட்டு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறைகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஒரு மாணவர் ஒரு கல்லூரியை தேர்வு செய்துவிட்டு 7 நாட்களுக்குள் அந்த மாணவர் அவர் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர்ந்து விட்டாரா? இல்லையா என்பதை சரிபார்த்து தகவல் தெரிவிக்க வேண்டும். கலந்தாய்வில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேரவில்லை என்றால், அதை ஆராய்ந்து மீண்டும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலி இடங்கள் சேர்க்கப்பட்டு நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு முதல் ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் ரூபாய் 5000 கட்டாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று, அரசாங்கம் நிர்ணயத்துள்ள கட்டணத்தை செலுத்தி கூட அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.