கல்வி

மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

rabiyas

மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு முறையை இந்தாண்டு அமல்படுத்துவது தொடர்பாக தடை விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு முறையையும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு முறையையும் இந்தாண்டு அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராகவும், தடைவிதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தற்போது உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் பல ஆண்டுகளாக எங்களது இயக்கம் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. எனவே தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என இடைக்கால மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. மேலும் 27% இடஒதுக்கீடு முறையை இந்தாண்டு அமல்படுத்துவதில் எந்த தடையும் விதிக்கக்கூடாது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணையை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தாண்டே அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.