கல்வி

தமிழகத்தில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்களை புதிதாக கட்டித்தர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்களை புதிதாக கட்டித்தர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Veeramani

தமிழகத்தில் பழுதடைந்துள்ள கட்டடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், புதிய கட்டடங்களை கட்ட வேண்டும், நெல்லையில் உரியிழந்த மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில், டவுன் சாப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர், 4 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் முழுமையாக ஆய்வு செய்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் அதன் பின்னரும் கூட பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் & கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஓரளவு பழுதடைந்துள்ள கட்டடங்களை உடனடியாக சீரமைக்கவும், பெருமளவில் பழுதடைந்துள்ளதை இடித்து விட்டு புதிய கட்டடங்களை கட்ட வேண்டும். விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என்பதால் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்திட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.